சோழர் காலத்தில் அறுவை மருத்துவர்கள் - நாவிதர்கள்:
சோழர் காலத்தில் நாவிதர்கள் மிகவும் உன்னத நிலையில் சிறப்புற்றிருந்தது கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகின்றது. இராஜராஜனின் கி.பி. 1014-ஆம் ஆண்டைய கல்வெட்டொன்றில் பஞ்சவன் மங்கலப் பேரரையன் அனையன் பவருத்திரன் மற்றும் இராஜராஜ பிரயோகத்தரையன் என்னும் பெயர் கொண்ட அறுவை சிகிச்சை செய்தவர் களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரயோகம் என்ற சொல் மருத்துவ சிகிச்சையைக் குறிப்பிடும் சொல்லாகும். எனவே பிரயோகத்தரையன் என்ற சொல் மருத்துவ சிகிச்சை செய்பவனைக் குறிப்பிடு வதாகும். அனையன் பவருத்திரன் என்பவர் கோலினமை (கோலினமை - கோலி - மயிர்) என்ற தொழிலில் வல்லவன் என்ற குறிப்பு வருகின்றது. இப்பெயருக்கு அருகில் இராஜராஜ பிரயோகத் தரையன் என்ற சொல் மருத்துவரைக் குறிக்கும். அம்பட்டன் என்ற சொல்லும் மருத்துவரைக் குறிக்கும். எனவே கோலினமை என்ற சொல்லும் மருத்துவத்துடன் தொடர்புடையதாகவே இருக்கும் என்று கல்வெட்டாய்வாளர் ஏ. சுப்பராயலு கருத்துத் தெரிவிக்கின்றார்.
திருவிடலூர் சிவயோகநாதர் ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்ட முதலாம் இராஜராஜ சோழனின் கி.பி. 1016-ஆம் நாளிட்ட கல்வெட்டில் இராணி குந்தவை ஆர்க்காட்டு கூற்றம் ஸ்ரீ பராந்தக சதுர்வேதி மங்கலத்துச் சபையிடமிருந்து நிலம் விலைக்கு வாங்கி அரையன் உத்தமசோழன் என்ற நாவிதனுக்குச் சல்லிய போகமாக வழங்கியதாகக் கூறப்பட்டுள்ளது. ((ARE No. 351/1907)
இதே ஆலயத்திலுள்ள மற்றொரு கல்வெட்டில் குந்தவை, இராஜகேசரி சதுர்வேதி மங்கலத்திலுள்ள ஒரு வேலி 4 மா நிலத்தையும், வேம்பத்தூரிலுள்ள ஒரு வீட்டையும் அரையன் உத்தம சோழன் என்ற இராஜேந்திர சோழ பிரயோகத்தரையன் ஆகிய அம்பட்டனுக்குச் சல்லிய கிரியா போகமாக (அறுவை மருத்துவத் தொழிலை விருத்தியடையச் செய்வதற்கான மானியத்தின் பெயர்) வழங்கி யிருப்பது தெரிய வருகின்றது. (ARE No. 350/1907)
நன்றி- கீற்று blog.
கருத்துகள்
கருத்துரையிடுக